குயவனே, குயவனே படைப்பின் காரணனே

1. குயவனே, குயவனே படைப்பின் காரணனே
களிமண்ணான என்னையுமே, கண்ணோக்கி பார்த்திடுமே

வெறுமையான பாத்திரம் நான், வெறுத்து தள்ளாமலே
நிரம்பி வழியும் பாத்திரமாய், விளங்கச் செய்யுமே
வேதத்தில் காணும் பாத்திரம் எல்லாம், இயேசுவை போற்றிடுதே
என்னையும் அவ்வித பாத்திரமாய், வனைந்து கொள்ளுமே

2. இறைவனே இறைவனே, இணையில்லாதவனே
குறை நிறைந்த என்னையுமே, கண்ணோக்கி பார்த்திடுமே

விலைபோகாத பாத்திரம் நான், விரும்புவார் இல்லையே
விலையில்லா உம் கிருபையால், உகந்ததாக்கிடுமே
தடைகள் யாவும் நீக்கி என்னைத், தம்மைப்போல் மாற்றிடுமே
உடைத்து என்னை உந்தனுக்கே, உடைமையாக்கிடுமே

3. மேய்ப்பனே மேய்ப்பனே, மந்தையை காப்பவனே
மார்க்கம் அகன்ற என்னையுமே, கண்ணோக்கி பார்த்திடுமே

மண்ணாசையில் நான் மயங்கியே, மெய்வழி விட்டகன்றேன்
கண்போன போக்கை பின்பற்றியே, கண்டேன் இல்லை இன்பமே
காணாமல் போன பாத்திரம் என்னைத், தேடி வந்த தெய்வமே
வாழ்நாளெல்லாம் உம் பாதம் செல்லும், பாதையில் நடத்திடுமே